முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை அரசியலுக்கு இழுத்துவந்து அவருக்கு மீண்டும் அநீதி இழைக்க கூடாது என மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்
குறித்த விடயத்தை முத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனபாலசிங்கம் தனது பதிவில் கூறியிருப்பதாவது, இளஞ்செழியனைப் பற்றி எனக்கு மிகவும் நல்ல அபிப்பிராயம் இருக்கிறது.
தமிழ் மக்களின் பிரமாண்டமான ஆதரவு
ஆனால், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்கப்படாமல் 'அநீதி' இழைக்கப்பட்ட காரணத்தினால் அவரை வட மாகாண முதலமைச்சராகக் கொண்டு வர வேண்டும் என்ற தொனியில் வரும் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை.
உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரை முதலமைச்சராக்கியதை போன்று மேல் நீதிமன்ற நீதிபதியை அதே பதவிக்கு கொண்டுவந்த பரீட்சித்துப்பார்ப்பது பொருத்தமில்லை.
நீதித்துறையில் இருந்தவரை அரசியலுக்கு கொண்டு வந்து வடக்கு தமிழ் மக்களின் பிரமாண்டமான ஆதரவுடன் முதலமைச்சராக்கிய போதிலும் அந்த பரீட்சார்த்தம் இலங்கைத் தமிழர் அரசியல் களத்தில் ஒரு வீண் வேலை என்றாகிப் போனது என்பதே பரவலான அபிப்பிராயம்.
இளஞ்செழியன் உண்மையில் வட மாகாண ஆளுநர் பதவிக்கு பொருத்தமானவர் என்பது எனது அபிப்பிராயம். ஆளுநர் பதவி என்பது மாகாணத்தில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக செயற்படுவது என்பதனால் பக்கச்சார்பின்றி செயற்படுவது சாத்தியமில்லை என்று கூறலாம்.
ஆளுநர் பதவியை கொடுக்கலாம்
ஆனால் நேர்மையானவர்கள் என்று பெயரெடுத்தவர்களை ஆளுநராக்குவதன் மூலம் ஓரளவுக்கேனும் பக்கச்சார்பின்றி செயற்படுவதை உறுதி செய்து கொள்ள முடியும்.
ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருந்தாலும் கூட மக்களால் தெரிவு செய்யப்படக் கூடிய ஒரு வட மாகாண சபை நிர்வாகத்தில் பெருமளவுக்கு தலையீட்டைச் செய்யாமல் சுமுகமாக இயங்க விடக்கூடிய பண்பும் பக்குவமும் கொண்டவராக செயற்படக்கூடியவர் என்று இளஞ்செழியனை கருதலாம்.
இன்றைய அரசாங்கம் இளஞ்செழியனுக்கு இழைத்ததாக கூறப்படும் அநீதிக்கு பரிகாரமாக வேண்டுமானால் ஆளுநர் பதவியை அவருக்கு கொடுக்கலாம்.
அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டுவர விரும்புவதாக நம்பப்படும்' தரப்புகள் மாகாண சபை முறையை நிராகரிப்பவர்களாக இருக்கிறார்கள் போன்று தெரிகிறது.
நிராகரிப்பவர்களின் சார்பில் இவரை முதலமைச்சராக்கி மீண்டும் ஒரு தடவை வட மாகாண சபையை கேலிக் கூத்தாக்கக் கூடாது.
மீண்டும் அநீதி
மாகாண சபைக்கு இருக்கின்ற எஞ்சிய அதிகாரங்களையேனும் பயன்படுத்தி அந்த முறைமையை பாதுகாப்பதற்கான ஆற்றலும் காலத்துக்கேற்ற அரசியல் விவேகமும் கொண்ட ஒருவரே வடமாகாண முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதே மாகாண சபை முறைமை இதுகாலவரையில் வடக்கு அரசியல் வாதிகளினால் கையாளப்பட்ட முறையின் விளைவான பட்டறிவு.
இளஞ்செழியனை அவர் காலஞ்சென்ற குமார் பொன்னம்பலத்துடன் பணியாற்றிய காலத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளனாக நான் அறிவேன். அவரது தந்தையாரையும் கூட கொழும்பில் சில நிகழ்வுகளில் கண்டு பேசியிருக்கிறேன்.
நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் நேர்மையும் எளிமையும் கொண்ட பண்பாளன் என்றும் கொடுமையைக் கண்டு கடும் சீற்றம் கொள்வதைப் போன்று அதேயளவுக்கு அவலங்களைக் கண்டு மனம் இரங்குபவர் அவர் என்பது பரவலான அபிப்பிராயம்.
தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் நடந்து கொண்ட முறை இதற்கு உலகறிந்த சான்று.
இளஞ்செழியனை அரசியலுக்கு கொண்டுவந்து பெயரைக் கெடுத்து அவருக்கு மீண்டும் அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.
அவரின் குணவியல்புகளும் ஆற்றல்களும் அரசியலில் அல்ல வேறு தளங்களில் பயன்படுத்தப்படுவதே தமிழ்ச் சமூகத்துக்கு பயன் தருவதாக இருக்கும். அரசியலுக்கு அவரைக் கொண்டு வருவதற்கு எவராவது விரும்பினால் அவர்கள் அவருக்கு திட்டமிட்டு அநீதி இழைப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்பதை எனது தாழ்மையான அபிப்பிராயம் என்றுள்ளது.
