திடீரென கைது செய்யப்பட்ட சிறீதரன் எம்.பியின் சாரதி

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S.Sritharan) சாரதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளின் போது மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக எழில்வேந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மீது கிளிநொச்சி பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 

மாவீரர்நாள் தினம்

தொடர்ந்து, பாரதிதாசன் எழில்வேந்தன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், ஏறக்குறைய பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மாவீரர்களின் படங்களினை காரணம் காட்டி, இரண்டு நாட்களுக்கு முன் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நடவடிக்கையானது, மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இத்தகைய நடவடிக்கையானது கடந்தகால அரசாங்கங்கள் போலவே தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய நிகழ்வுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொண்டு வருகின்றதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.