மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 35 போகோஹராம் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேமரூன் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதல்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் நைஜீரியா மீது ஜிஹாதி போராளிகள் திட்டமிட்ட தாக்குதலைத் தடுக்க இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் சுமார் 800 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரிய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே இதுவரை 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹராம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்த நாட்டின் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய விமான படையின் செய்தி தொடர்பாளர் எஹிமென் எஜோடேம் தெரிவித்துள்ளார்.