வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் - ஊசியால் தொடரும் சோகம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி மற்றுமொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டு ஒவ்வாமைக்கு உள்ளான நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.அனுலாவதி என்ற பெண்ணே இந்த கொடிய ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஊசி ஏற்றிய பின்னர் கடுமையான ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு தீவிர சிகிக்சை வழங்கி அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தெரியவந்துள்ளது.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்னவின் மரணம் தொடர்பில் விளக்கமளித்த வைத்திய நிபுணர்கள், இவ்வாறான ஒவ்வாமைகள் மிகவும் அரிதாகவே பதிவாகும் எனவும், இதற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.