பிள்ளையானின் மற்றுமொரு முக்கிய சகா அதிரடியாக கைது : இதுவரை 7 பேர் என தகவல்


மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி)கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கமைய இதுவரை பிள்ளையான் உட்பட 7 பேர் கைதாகியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பிள்ளையான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்டசம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சி.ஐ.டி.யினறால் அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்துள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்துவந்த சி.ஐ.டி. யினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை பிள்ளையானுடன் சேர்த்து இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.