''டிக்டோக்''கில் அறிமுகமான இளைஞனால் 15வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - கருத்தரித்துள்ளதாக வைத்திய பரிசோதனை தெரிவிப்பு


15 வயதுடைய சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு கருத்தரித்துள்ளார்.
இந்த சிறுமி சுகயீனம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி தனது தந்தையுடன் ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

வைத்திய பரிசோதனைகளின் போது சிறுமி கருத்தரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் களுத்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுமி "டிக்டோக்" கில் அறிமுகமான இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் அந்த இளைஞன் தனது வீட்டில் ஒருநாள் இரவு தங்கியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

டிக்டோக்கில் அறிமுகமான இளைஞனின் முகவரி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.