ஈரான் வசமிருந்த 400 கிலோ யுரேனியம்..? - அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்



ஈரான் வசமிருந்த 10 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய 400 கிலோ யுரேனியத்திற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 


ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்து இருக்கும் அல்லது அழிந்திருக்கும். 


ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.


போர்டோவ் அணுசக்தி நிலையத்தை அழிப்பதே தாக்குதலின் நோக்கம். மற்ற நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். தாக்குதலில், போர்டோவ் அணுசக்தி நிலையத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், யுரேனியத்தை பாதுகாப்பான இடங்களுக்கு ஈரான் மாற்றியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. 


அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் போர்டோவ் அணுசக்தி நிலையங்கள் முன்பு 16 பாரவூர்திகள் வரிசையில் நின்றமை செயற்கைகோள் எடுத்த புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு பிறகு அந்த இடத்தில் அந்த பாரவூர்திகள் காணப்படவில்லை. அதில் என்ன கொண்டு செல்லப்பட்டது என தெரியவில்லை என அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.


இதேவேளை ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், அதை அழிப்போம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


போர்நிறுத்த ஒப்பந்த அறிவிப்புக்கு பின்னர் நெதன்யாகு வழங்கியுள்ள முதல் நேர்காணலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது அவர், நாங்கள் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றோம், இந்த வெற்றி தலைமுறைகளுக்கு நிலைத்திருக்கும்.


நாங்கள் ஒரு சிங்கம் போல எழுந்தோம், எங்கள் கர்ஜனை தெஹ்ரானை உலுக்கியது. இந்தப் போர் உலகின் அனைத்துப் படைகளிலும் பேசப்படும்.


அராக், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள முக்கியமான வசதிகளை நாங்கள் அழித்தோம். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், அதை அழிப்போம்.


கடத்தப்பட்ட வீரர்களைத் திருப்பி அனுப்பி ஹமாஸை அழிப்பதன் மூலம் ஈரானிய தீய அச்சுறுத்தலுக்கு எதிரான பணியை நாம் முடிக்க வேண்டும். ஈரானிய அதிகாரிகளும் போரில் வெற்றியைக் கோரியுள்ளனர்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களை அகற்றுதல் என்ற தங்கள் இலக்குகளை அடையாமல் போர்நிறுத்தத்தைக் கோரின என குறிப்பிட்டுள்ளார்.