காசாவில் மீண்டும் மரண ஓலம் : குண்டுமழையால் குவியும் உடல்கள்

போர் நிறுத்தம் முறிவடைந்து காசா மீதான தாக்குதலை நேற்று (01) ஆரம்பித்த இஸ்ரேல் படையினர் நடத்திய குண்டுமழையில் பெண்கள் குழந்தைகள் என 178 பேர் கொல்லப்பட்டதுடன் 500 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று காலை 8.00 மணி முதல் 178 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் 589 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் உள்ள பெய்ட் லாஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை நேற்று அதிகாலையில் இருந்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட  54க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட முப்பது பேரின் உடல்கள், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள், காசாவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.

தெற்கில் உள்ள மருத்துவமனைகளும் டசின் கணக்கில் உயிரிழப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய படையினர் நிலம், கடல் மற்றும் வான்வழியாக, காசா பகுதியின் வடக்கு, மையம் மற்றும் தெற்கில் வெவ்வேறு பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியுள்ளனர், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.