அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமுறை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
மேலும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12 நாடுகளுக்கு தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி
1. ஆப்கானிஸ்தான்,
2. மியன்மார்
3.சாட்
4. கொங்கோ
5.எக்குவடோரியல் கினியா
6.எரித்திரியா
7.ஹைட்டி
8.ஈரான்
9.லிபியா
10.சோமாலியா
11.சூடான்
12. ஏமன்
ஆகிய நாட்டின் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 19 நாடுகளில் 10 ஆப்பிரிக்காவில் உள்ளன. அவற்றில் 9 நாடுகள் கறுப்பின ஆப்பிரிக்க மக்கள் வாழும் நாடுகள் ஆகும்.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் குழுவை, சர்வதேச பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் ஆயுதக் குழுக்கள் செயல்படும் நாடுகள் மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வருகைதந்து சட்டவிரோதமாக அங்கேயே தங்கும் நாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.