மரணத்தைத் தோற்கடித்த 11ஏ: அதிசயமான விமான இருக்கை! பற்றித் தற்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது!
எயார் இந்தியா விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்ற பயணி இந்தப் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்து உயிர் தப்பியிருக்கிறார்.
அதே இலக்கமுடைய இருக்கையில் பயணித்த ஒரு பயணியும் 27 ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் தப்பியிருக்கிறார். ஆனால், அவர் பயணம் செய்தது எயார் இந்தியா விமானம் அல்ல. எயாபஸ் 320. இருக்கை இலக்கம் 11ஏ!
அண்மையில் -கடந்த ஜூன் 12 – இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள சர் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்கு உள்ளான எயார் இந்தியா விமானத்தில் பயணித்த ஒரேயொரு பயணி உயிர் தப்பினார்.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தாய்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் பாடகரும் நடிகருமான James Ruangsak Loychusak உயிர் தப்பினார். அவருடன் மேலும் பலரும் உயிர் பிழைத்துக்கொண்டனர்.
ரமேஸைப் போலவே தாய்லாந்து பயணி ஜேம்ஸும் விபத்துக்குப் பின்னர் எழுந்து நடந்திருக்கிறார். ஆனால், ரமேஷைப்போன்று தன்னந்தனியனாக அல்ல.மற்றவர்களின் துணையுடன்.
விஸ்வாஸ்குமார் உயிர் தப்பியது எப்படி? என்பதுதான் தற்போது உலகம் முழுவதும் எழுந்திருக்கும் கேள்வி, இஸ்ரேல் வெல்லுமா, ஈரான் வெல்லுமா? என்பதற்கு அப்பால் இந்தக் கேள்வி முதலிடம் வகிக்கிறது.
ரமேஷ் மருத்துவமனையிலிருந்து வந்ததும் அவரைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பரவலான கோரிக்கை எழுந்திருக்கிறது. அதேநேரம், ஏன் ரமேஸும் இறந்திருக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்போரும் இருக்கிறார்கள்.
ரமேஷ் உயிரிழந்திருக்க வேண்டும் என்பது அல்ல பிரச்சினை. அவர் எப்படி தப்பினார்? சிலவேளை அவர்தான் ஏதோ செய்துவிட்டாரோ! என்று மனித மனம் அங்கலாய்க்கிறது.
இந்தச் சந்தேகத்தைச் சுக்குநூறாக்கும் விதத்தில்தான் இந்தப் புதிய தகவல் ஓரிரு நாள்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கிறது.
இந்தப் 11ஏ இலக்க இருக்கை அதிசயமானதா, விசேடமாக வடிவமைக்கப்பட்டதா? என்று பார்த்தால் அவ்வாறு அல்ல. இரண்டு விமானங்களும் வேறு வேறு ரகம். இருக்கை வடிவமைப்பும் வேறு வேறு. இலக்கம் மட்டுமே 11ஏ!
இந்தியாவில் விமான விபத்து இடம்பெற்ற அன்று 1206. அதாவது ஜூன் 12. குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூப்பணியின் அதிர்ஷ்ட எண் 1206 என்றார்கள். ஆனால், அதே அதிர்ஷ்ட எண்தான் அவருக்கு முடிவையும் தந்திருக்கிறது.
ஜூன் 12 கூட்டுத்தொகை மூன்று. இருக்கை இலக்கம் 11ஏ என்பதும் மூன்று. இந்த மூன்றாம் எண் ஒருவருக்கு அதிர்ஸ்டமாகவும் பலருக்கு மரணத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்திருக்கிறது என்கிறார் திருவாளர் சோதிடம்!
எது எப்படியோ, அதிர்ஷ்டமா, சோதிடமா, அறிவியலா, சாமர்த்தியமா என்று ஒன்றுமே புரியவில்லை. விபரம் தெரிந்த நிபுணர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்!