இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவின் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்தது. இதனால் இந்தியா - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக பேச பல முறை முயன்றதாகவும், ஆனால், பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகியோர் நெருக்கமாக உரையாடினர். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவியது.
இந்த புகைப்படத்தை ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பகிர்ந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ” இந்தியாவையும், ரஷ்யாவையும், மோசமான சீனாவிடம் இழந்து விட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு பின்பு சீனா, 2ஆம் உலகப்போரின் 80-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் பிரம்மாண்ட ராணுவ பேரணியை நடத்தியது.
இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னிடம், சீன ஜனாதிபதி ஜின்பிங் நெருங்கமாக பேசிக் கொண்டிருந்தார். இது குறித்தும் ஏற்கெனவே கருத்து தெரிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
அமெரிக்காவுக்கு எதிராக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சதிசெய்யும் வேளையில், ஜனாதிபதி புடினுக்கும், ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கும் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.