'இந்தியாவை வெற்றிக்கொண்டுள்ளோம்..." : பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு


இந்தியாவுடனான போரில் தாங்கள் வென்றுவிட்டதாக மார்த்தட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
இந்தியாவின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஒப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை தாக்கியது.
இதனால் இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களையும் இந்தியா முறியடித்தது, இந்த மோதலின் எதிரொலியாக சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் தனது வான் எல்லையை மூடியது.

 
இந்த போரில் இந்தியாவின் ரஃபேல் உள்ளிட்ட விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து பல இடங்களில் கூறி வருவதுடன், போரிலும் தாங்கள் வெற்றிப்பெற்றதாக கூறிக் கொண்டது.


துருக்கி ஈரான் நாடுகளுக்கு பயணம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
 ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “காஷ்மீர் பிரச்சினை மற்றும் நதிநீர் பங்கீடு பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வணிகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்தும் அயல் நாடுகளுடன் பேச நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

 
இந்த சமாதான முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா உண்மையிலேயே அமைதியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுவார்கள். இந்தியாவுடனான போரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.


இதேநேரம் பாகிஸ்தான் இராணுவ தலைவருக்கு அந்நாட்டின் பிரதமர், சீனாவில் நடந்த போர் ஒத்திகையின் போது எடுத்த புகைப்படத்தை மாற்றியமைத்து, இந்தியாவுக்கு எதிரான போரில் சாதனை செய்ததாக கூறி பரிசாக வழங்கி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஒப்ரேஷன் பன்யான் அல்-மார்சஸ் என்பதை குறிப்பதாக கூறப்படும் புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இராணுவ தளபதி  முனீர் அவர்களுக்கு கொடுத்துள்ளார். ஆனால் இந்த படம் உண்மையில் 2019 ஆம் ஆண்டு சீனா ராணுவ பயிற்சியின்போது எடுக்கப்பட்தாகும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்த புகைப்படத்தை போட்டோஷாப் செய்து, பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுக்கு இந்தியாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்காக கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
இதுதொடர்பாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.