அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சிலுவையில் அறையக் கோரும் ஈரானின் மத அடிப்படைவாதிகளால் உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் தூண்டக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை முதன்மை அரசியல்வாதிகள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தனது செயல்களுக்காக வருத்தப்பட வைக்க, இஸ்லாமியர்களை வலியுறுத்தி அயதுல்லாக்கள் ஆயுதம் ஏந்துமாறு அழைப்பு விடுத்தனர்.
இது மட்டுமன்றி, ட்ரம்பை கடவுளின் எதிரி எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், ஃபத்வா எனப்படும் எச்சரிக்கை ட்ரம்புக்கும் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் எதிராக இஸ்லாமிய தண்டனைச் சட்டம் மொஹரேப்பின் கீழ் மூத்த முல்லாக்களால் அறிவிக்கப்பட்டது.
ஷரியா சட்டம் என்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொல்லப்படுவதோடு மட்டுமல்லாமல், இறப்பதற்கு முன் சித்திரவதை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு சிலுவையில் அறைவதும் உறுப்புகளை சிதைப்பதும் தண்டனையின் ஒருபகுதியாக பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஈரானின் மூத்த மதகுரு நஜ்முதீன் தபாசி தெரிவிக்கையில், ட்ரம்பை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சபதம் செய்துள்ளார்.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவைக் கொல்ல ஒரு கொலையாளியை நியமிக்க உள்ளதாக ஈரானிய மதகுரு அப்துல்மாஜித் கரஹானி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் முன்னெடுத்த 12 நாள் போருக்கு பின்னரே, மத குருக்கள் பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்துள்ள மத குருக்கள் மீது தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுமட்டுமன்றி, ஈரான் ஆதரவு அடிப்படைவாதிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.