'யாராவது அருகில் வந்தால், வெட்டுவேன்" : தம்பியை சரமாரியாக வெட்டிய அண்ணன், காரணமும் வெளியானது


 


பதுளை நகர மையத்தில் நேற்று செவ்வாய்கிழமை  மாலை,  சகோதரர் ஒருவர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்கள் கோடரியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பதுளை அமுல்வல்பிட்டிய பகுதியை சேர்ந்த குறித்த சகோதரர்கள் இருவருக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை காரணமாகவே, நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தம்பி, சில மாதங்களுக்கு முன்னர் தனது அண்ணனை வாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அண்ணன், நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் அண்ணன், நேற்று மாலை தம்பியை பதுளை நகரில் வைத்து இவ்வாறு சரமாரியாக தாக்கியுள்ளார்.
 
 சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான தம்பி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இதன்போது "யாராவது அருகில் வந்தால், உங்களையும் வெட்டுவேன்" என்று சந்தேக நபர் கத்திக் கொண்டிருந்ததால், அருகில் இருந்த மக்கள் அவரை நெருங்கவில்லை.
பதுளை பொலிஸ் நிலையத்தின் சாரதியும் மற்றும் சார்ஜென்ட் “நிலந்த” என்ற இளைஞனும் அங்கு வந்து, சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், அவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.