இந்தியாவில் ஐஃபோன்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பது இந்தியாவுக்குதான் பயனளிக்கும், அமெரிக்காவுக்கு எந்தவகையிலும் பயனளிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்பிள் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அறிவிக்கப்படாத வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டிருந்தது.
அதேப்போன்று, இந்தியாவின் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா அண்மையில் கூடுதல் வரி விதித்தது. இதை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என இந்திய மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்தவகையில், உலக அளவில் ஐஃபோன் உற்பத்திக்கான மையமாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஐஃபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கட்டார் நாட்டின் தலைநகர் தோஹாவில் வணிகக் கூட்டம் ஒன்று நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவில் ஐஃபோன்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பது இந்தியாவுக்குதான் பயனளிக்கும், அமெரிக்காவுக்கு எந்தவகையிலும் பயனளிக்காது என்றும் எனவே அமெரிக்காவில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்குமாறும் டிம் குக் இடம் கூறியதாகத் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து டிம் குக்கிடம் தெரிவித்த ட்ரம்ப், “ நான் உங்களை மிகவும் நன்றாக நடத்துக்கிறேன். இப்போது நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். . நீங்கள் இந்தியாவிற்கு உதவ விரும்பினால் பரவாயில்லை. ஆனால், நீங்கள் இந்தியாவில் தயாரிப்பதை நான் விரும்பவில்லை. “ என்று டிம் குக்கிடம் தெரிவித்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
--