கொழும்பு நீதிவான் நீதிமன்றின் 5ஆம் இலக்க அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, துப்பாக்கிதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க எனும் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் அடையாளம் காண சாட்சியாளர்கள் தவறியுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தேகநபர், அடையாள அணி வகுப்புக்காக நேற்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
காலி, பூஸா சிறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் நேற்று, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, துப்பாக்கிச் சூடு நடந்த தினத்தன்று. கொழும்பு 5ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் இருந்த இரு கைதிகள், சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்
இதன்போது அவ்விருவரும் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் நபரை அடையாளம் காணவில்லை என, அவரது சட்டத்தரணி அஜித் பத்திரண குறிப்பிட்டார்.
இதனையடுத்து சந்தேக நபர், கொழும்பு பிரதான நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர் செய்யப்பட்டார்.
அதனையடுத்து அவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் அன்றைய தினம் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக அவரை மன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார்.