ஈரானுடன் பல ஐரோப்பிய நாடுகள் அழிவுகரமான அணுகுமுறையை முன்னெடுப்பதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸுடன் தொலைபேசி உரையாடலின் போதே ஈரானின் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான அண்மைய வான்வழிப் போர் தொடர்பாக சில ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டையும் அரக்சி விமர்சித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு குறிப்பிட்ட சில நாடுகள் ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், எந்த நாடுகளை அவர் குறிப்பிடுகிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
அண்மையில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்த ஜேர்மன் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போருக்குப் பிறகு ஒரு மூத்த வெளிநாட்டு அதிகாரி அந்த நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் உருக்குலைந்து போன இஸ்ரேல் பகுதிகளை பார்வையிட்டுள்ள அவர் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஜூன் 17 அன்று கனடாவில் நடந்த G7 உச்சி மாநாட்டின் இடையே ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவிக்கையில், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நம் அனைவருக்கும் சார்பான மோசமான வேலையை செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.