பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலர் பலி



மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு  ஏற்பட்டது. 

 
இந்த நிலநடுக்கத்தால் 60 பேர்  வரை உயிரிழந்துள்ள நிலையில், 150 பேர் வரை காயமடைந்துள்ளனர். 
 

இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 
இதனால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த வழிபாட்டு இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
 

போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்தமையினால், அங்கு கூடியிருந்தவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 
செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம்  சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளித்துள்ளது. இருப்பினும் சிறிய கடல் அலை அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதிகளை விட்டு மக்கள் விலகி இருக்குமாறு  அறிவுறுத்தியுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.