'48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்" : அதிர்ச்சி தகவல் வெளியானது


”போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் கிடைக்காவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்” என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

எல்லையில், காஸாவைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலிய ராணுவத்தினர், கிட்டத்தட்ட 11 வாரங்களுக்குப் பிறகு, மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை மாத்திரமே வழங்க அனுமதிக்கின்றனர்.
 
அதுவும் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராஜியம் உள்ளிட்ட நட்பு நாடுகளின் அழுத்தத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாடுகளால் காஸாவில் இருக்கும் மக்களும், குழந்தைகளும் உதவியின்றி வாடுகின்றனர்.
 
குழந்தைகளுக்கான உணவுகளை அயல்நாடுகள் வழங்கி வருகிறபோதும் அதை இஸ்ரேல் இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. இதனால், அவர்களுடைய எதிர்க்காலம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

இதுகுறித்து கவலை எழுப்பியுள்ள ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டொம் பிளெட்சர்,
 
”இஸ்ரேலின் முழுமையான முற்றுகைக்குப் பிறகு, காஸாவில் குழந்தைகளுக்கான உணவு உட்பட உதவிகளை வழங்கும் லொரிகள்  5மாத்திரமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
இது, கடலில் ஒரு துளி. உதவி இன்னும் தேவைப்படும் மக்களை அது முழுமையாகச் சென்றடையவில்லை. இவ்வாறு உதவி கிடைக்காமல் போனால், அவர்களை நாங்கள் அடைய முடியாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.
 
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இப்போது தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத தாய்மார்களுக்கு அந்தக் குழந்தை உணவை வழங்க நாங்கள் எல்லா வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.