“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் சென்று அடிதடியில் ஈடுபட்ட பிரசன்ன ரணவீர




கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர பல பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தனது மனைவி மற்றும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் கடந்த 14ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இராஜாங்க அமைச்சர், அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் துப்பாக்கிகளுடன் பிரதான வாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது, அமைச்சரின் பாதுகாவலர்களிடம் உள்ள துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர்.

இதனால், விமான நிலைய காவலர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சரின் மனைவியின் பயணப் பொதிகளை ஏற்றிச் சென்ற போர்ட்டர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலைய போர்ட்டருக்கு ரூ.1,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில், அமைச்சர் ரூ.700 கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

போர்ட்டரை அறைந்த பின்னர், இராஜாங்க அமைச்சர் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறியதுடன், குருநாகலைச் சேர்ந்த போர்ட்டர் சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிடம் வினவியபோது;

“அந்த நேரத்துல எனக்கு கோபம் வந்துவிட்டது. கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” எனத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.