'விளக்கு இருந்தால் போதும்.." : சர்ச்சைக்குரிய கருத்தால் பதவி விலகிய மின்சார சபையின் பேச்சாளர்

மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும் என கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார்.

இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் பதவி விலகிய நிலையில் தனது கருத்துக்களுக்காக பொதுமன்னிப்பு கோரியுள்ளார் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்கள் இலங்கை மின்சாரசபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ நிலைப்பாடுகளை பிரதிபலிக்கவில்லை எனவும் அவரின் கருத்துக்காக நான் அமைச்சு மற்றும் மின்சாரசபை சார்பில் மன்னிப்பு கோருகின்றேன் எனவும்  கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.