'அவர்கள் மோதிக்கொண்டால் மோதிக்கொள்ளட்டும்.." : அமெரிக்காவின் கருத்தால் பரபரப்பு

 


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அந்நாட்டு உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்  தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில்  உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய இராணுவம் நேற்று வியாழக்கிழமை  இரவிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்


“போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மாத்திரமே முடியும்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தில் நாம் தலையிட போவதில்லை. அது நம் பணியும் அல்ல.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் ஆயுதங்கள் கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது.

இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பது நம் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் உள்ளது என வான்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், அரபிக்கடல் முழுவதும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துறைமுகங்கள், கடற்பகுதிகளில் குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதோடு பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, இந்தியாவின் நடவடிக்கைகளால் பதற்றங்கள் தொடர்ந்து அதிக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

இந்திய தரப்பின் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதன் காரணமாக பாரிய மோதல் ஒன்று உடனடியாக நிகழும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமு்ம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.