இரவு இரவாக கேட்ட வெடிசத்தம் : உலகை அதிர வைத்துள்ள இந்தியா - பாக். மோதல்


இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் விடிய விடிய தாக்குதல் தொடர்ந்ததாகவும் தொடர்ந்து வெடிகுண்டு சத்தம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் எல்லை உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் திடீரென அத்துமீறித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் பரபரப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.


ஜம்மு காஷ்மீர் முதல் பல எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் இந்தியாவும் பாகிஸ்தானின் பல எல்லைகளில் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.

அத்துடன் லாகூரில் நடக்கும் தாக்குதல்கள் காரணமாக பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேநேரம் பாகிஸ்தான் திடீரென நேற்றிரவு இந்தியா மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
மேலும் எல்லையில் போர் பதற்றம் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், தர்மசாலாவில் நேற்று நடந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் திடீரென நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.