துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை இன்னும் நிறைவுக்கு வராத நிலையில், மீண்டும் கொள்கலன் நெறிசல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் திட்டமிட்டு இந்த நெறிசலை ஏற்படுத்தியிருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
களுத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்
சில மாதங்களுக்கு முன்னர் எவ்வித சோதனைகளும் இன்றி திட்டமிட்டு 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைப் போன்றும், இம்முறையும் திட்டமிட்டு மீண்டும் நெறிசல் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏற்கனவே விடுவிக்கப்பட்ட கொள்கலன்களால் நாட்டுக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை இன்றும் மதிப்பீடு செய்ய முடியாமலுள்ளது.
குறித்த கொள்கலன்களின் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதன் உண்மை என்ன என்பதைக் கூட அரசாங்கத்தால் தெளிவுபடுத்த முடியாமலுள்ளது. நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த கொள்கலன்கள் வந்தமையால், அதனை நிவர்த்தி செய்வதற்காக உப்பு கொண்டு வரப்பட்ட கொள்கலன்களே விடுவிக்கப்பட்டதாகக் கூறி அரசாங்கம் இதனை நியாயப்படுத்த முற்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்தும் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் ஆட்சியையே தேசிய மக்கள் சக்தி செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த பொய்களுக்கு தேசிய மக்கள் சக்தி பதிலளிக்க வேண்டியேற்படும்.
தற்போது இறக்குமதி செய்யப்படும் உப்பு தரக்குறைவானது என சுங்க பேச்சாளர் ஊடாக தெரியவந்துள்ளது.
அவ்வாறெனில் தரக்குறைவான உப்பின் அளவு?, அவற்றுக்கு என்ன நடந்தது?, அவை சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனவா?, அவ்வாறில்லை என்றால் அவை எங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன? என்பதை கூறுங்கள் என்றார்.