கண்டியில் இடம்பெற்று வரும் தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த காணொளி காட்சியில் போக்குவரத்து கடமை சீருடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்து செல்லுமாறு கடுமையான வார்த்தை பிரயோகம் மூலம் சொல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
அத்துடன் அருகில் மக்கள் ஶ்ரீ தலதா வழிபாட்டுக்காக வரிசையில் நிற்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கண்டி மாவட்டம் 1 இற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.