'அசிங்கப்படாதீர்கள்.." : ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

 ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்றவர்களுக்கு தற்போது அங்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை. அதனால்  எமது நண்பர்கள் தொடர்ந்தும் அங்கிருந்து அசிங்கப்படாமல் தங்களின் தாய் வீட்டுக்கு மீண்டும் வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.


சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் எமது நண்பர்கள் மீண்டும் தங்களது தாய் வீட்டுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

ஏனெனில் அவர்களுக்கு தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இடம் இல்லை. அதனால் தொடர்ந்தும் எமது நண்பர்கள் அங்கு இருப்பதால், அவர்கள் கோழைகளாக்கப்பட்டு மலினப்படுத்தப்படும் நிலையே ஏற்படும்.

தாய் கட்சியின் செயலாளர் என்றவகையில் பொறுப்புடன் இந்த அழைப்பை விடுக்கிறேன். ஐக்கிய தேசிய கட்சியின் கதவு எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும்.

மேலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரச தலைவராக இருந்து அவர் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றத் தவறினாரா அல்லது அவரை அறியாமல் இந்த தாக்குதல் இடம்பெற்றதா என்பதை நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்  என அவர்  தெரிவித்தார்.