'காசாவுக்காகா கொலை செய்தேன்.." - அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்



நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்,  காசாவுக்காக செய்தேன் என இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் டி.சி. யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 31 வயதான எலியாஸ் ரோட்ரிகஸ் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, ரோட்ரிகஸ் "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என்று கோஷமிட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை தான் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வொஷிங்டன், டிசியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு யூத எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு தூண்டுதல் சூழலே காரணம் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தத் தூண்டுதல்கள் பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளாலும், குறிப்பாக ஐரோப்பாவிலிருந்தும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கும் யூத சமூகத்திற்கும் எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் அதிக கவலை இருப்பதாக கிடியோன் சார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அத்துடன், கொடூரமான யூத எதிர்ப்பு கொலையால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி ஆகியோர் இந்த விபரங்களைப் பற்றித் தமக்குத் தெரிவித்ததாகவும், கொலையாளியை அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யூத எதிர்ப்புக்கு எதிராக தெளிவாக நின்றதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெதன்யாகு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற விடயங்கள் இடம்பெற்றது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.