"போர் தொடங்குகிறது" - பதற்றத்தை அதிகரிக்கும் ஈரானிய உச்ச தலைவரின் எச்சரிக்கை




இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “போர் தொடங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

"அலி கைபருக்குத் திரும்புகிறார்"  என்று அந்தப் பதிவு கூறுவதாக ஈரான் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு தெரிவித்துள்ளது.


இந்த அறிக்கை ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம் மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் யூத நகரமான கைபரை அவர் கைப்பற்றியதைக் குறிப்பதாக கூறப்படுகிறது.


அத்துடன் குறித்த பதிவில், வானத்தில் நெருப்புத் துளிகளுடன், கோட்டை ஒன்றுக்கு வாளுடன் மனிதன் ஒருவன் நுழைவதைப் பற்றிய படம் காட்டப்பட்டுள்ளது.



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலைக் கோரியதிலிருந்தும், அமெரிக்கா கமேனியைக் கொல்லாமல் இருப்பதைக் கூறியதிலிருந்தும் வெளியான  கமேனியின் முதல் சமூக ஊடக பதிவு இதுவாகும்.


முன்னதாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது அமெரிக்காவிற்குத் தெரியும், ஆனால் அவர் இப்போதைக்கு கொல்லப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


ஐந்து நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலை, ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


உயர் தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும், அவர் ஒரு எளிதான இலக்கு. அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.இப்போதைக்கு அவரை கொல்லப்போவதில்லை.


எனினும் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாம் விரும்பவில்லை.


அத்துடன் தமது பொறுமை குறைந்து வருகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


தெஹ்ரானின் 9.5 மில்லியன் குடியிருப்பாளர்கள், அங்கிருந்து வெளியேறுமாறு, ட்ரம்ப் வலியுறுத்திய பின்னர், கமேனியின் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.