'இஸ்ரேல் - ஈரான் சண்டையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து.." : வெளியான தகவல்


 மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பதற்றங்களால் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியிலிருந்து மீட்சிடைந்துவரும் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடும் என பொருளியலாளர் தலால் ரஃபி எச்சரித்துள்ளார்.
 
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையில் அதிகரித்துவரும் பதற்றநிலையை அடுத்து தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அவர்,

'ஈரான் மீதான இஸ்ரேலின் இராணுவத்தாக்குதலை அடுத்து உலக சந்தையில் எண்ணெயின் விலை சுமார் 12 சதவீதத்துக்கும் மேல் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இது வெளியக அழுத்தங்களால் நலிவடைந்த நிலையில் இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தின் மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும்' எனக் கவலை வெளியிட்டுள்ளார்.
 
அத்தோடு இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக வருடாந்தம் சுமார் 4.5 பில்லியன் டொலர்களைச் செலவிடுவதாகவும், தற்போது எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் 12 சதவீத உயர்வினால் வருடாந்த இறக்குமதிச்செலவு மேலும் 500 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதுமாத்திரமன்றி மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை மேலும் தீவிரமடையும் பட்சத்தில் எரிபொருள் விலை பெருமளவால் அதிகரிக்கும் எனவும், அதன் விளைவாக நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சியடைவதுடன் ரூபாவின் பெறுமதி மீதான அழுத்தங்கள் வலுவடையும் எனவும் தலால் ரஃபி தெரிவித்துள்ளார்.