இலங்கை கடற்கரையில் அண்மைக்காலமாக இந்தியாவின் மருத்துவ கழிவுகள் அதிகமாக கரையொதுங்குவதாக united nations climate change Adaptation plane ஆலோசகர் போராசிரியர் W.M. விமலசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் மெட்ராஸ் பகுதிகளிலே அதிகமான மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள் கடலில் சூட்சுமமாக விடப்படுகிறது.
இது பல காலமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்றைய நிலையில் குறித்த கழிவுகள் அதிகமாக வெளியேற்றப்படுவதால் எமக்கு உணரக் கூடியதாக இருக்கிறது.
கடலில் ஏற்படும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காற்றுகளால் மன்னார் தொடக்கம் அம்பாந்தோட்டை வரை உள்ள கடற்கரைகளில் இந்த மருத்துவ கழிவுகள் கரையொதுங்குகின்றன.
இது தொடர்பில் இலங்கை சூழலியலாளர்களும் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். அண்மைக்காலங்களில் ஊடகங்களில் கூட பலவாறான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
குறித்த கழிவுகளில் ஊசிகளும் காணப்படுகிறது. பல கழிவுகள் கடல் மண்ணில் புதையுண்டு போவதால் வெளியில் தெரிவதில்லை. இவற்றால் ஏற்படும் ஆபத்துக்களை அறுதியிட்டு கூற முடியாததாகும். பலவாறான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகள் சர்வதேச சூழல் பாதுகாப்பு சட்டங்களை கடைபிடிப்பதில்லை. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் எமது நாடு சிவப்பு பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இவ்வாறான செயற்பாடுகளே இதற்கான காரணமாகும்.” என தெரிவித்தார்.