கொழும்பில் வாடகைக்கு வீடு மற்றும் வாடகைக்கு அறைகள் தேடும் போர்வையில் பாரிய கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு - கிரான்ட்பாஸில் வாடகைக்கு அறை இருப்பதாக இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்திய பெண் ஒருவர் பாரிய மோசடியில் சிக்கி தனது தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களை இழந்துள்ளார்.
குறித்த விளம்பரத்தை பார்வையிட்ட ஒரு யுவதி, வீட்டு உரிமையாளரான பெண்ணைத் தொடர்பு கொண்டு வாடகைக்கு அறையைப் பெற்றுள்ளதுடன், முற்பணமாக ஒரு சிறிய தொகையையும் செலுத்தியுள்ளார்.
தான் மகரகம பகுதியில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளதுடன், தனது அடையாள அட்டையின் பிரதி ஒன்றையும் வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு, குறித்த யுவதி வழங்கியுள்ளார்.
இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் தங்கியிருந்துள்ளதுடன், இரு நாட்களின் பின்னர் வீட்டு உரிமையாளரான பெண் பணிக்குச் சென்ற பிறகு வீட்டிலிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
மேலும் வீட்டிலிருந்த பொருட்களை கொண்டு உணவை சமைத்து உண்டு விட்டுச் சென்றதாகவும் வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணை தேடும் முயற்சியிலும் வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோசடி செய்த யுவதியின் அடையாள அட்டை பிரதியை பதிவிட்டு தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது, மோசடி செய்த யுவதியுடன் தொடர்புடைய சிலரால் வீட்டு உரிமையாளருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் இடம்பெற்று ஒரு சில தினங்களின் பின்னர், கொள்ளையில் ஈடுபட்ட யுவதி, வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு பிரிதொரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து மிரட்டல் விடுக்கும் தொணியில் குறுஞ்செய்திகளையும் அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாலும் கூட, தன்னைப் பிடிக்க முடியாதென்றும், பொலிஸார் அல்ல ஜனாதிபதியே வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாதென்றும் யுவதி குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி இருந்த இடத்தை கண்டுபிடித்போதும் அவர் தலைமறைவாகியுள்ளார்.
கொள்ளையில் ஈடுபட்ட யுவதிக்கு 25 வயது என்றும், இரு பிள்ளைகளின் தாயாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதியின் பின்னால் மிகப்பெரிய குற்றக் கும்பல் இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்னர்.