யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நகைகளை அரச பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி விடக்கூடாது என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ராஜபக்ஷ காலத்தில் நடந்த போரின் போது விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் காணாமல் போய்விட்டன. பணம் மற்றும் உடமைகள் காணாமல் போயுள்ளன என்று பேசப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இராணுவத்தினர் வசமிருந்த நகைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லவொரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதை நாங்கள் பாராட்ட வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அதாவது இந்த நகைகள் சாதாரண மக்களுடையவையே. அவர்கள் அந்த வைப்பகத்தில் நகைகளை வைத்தமைக்கான அத்தாட்சிகளை பலரும் வைத்திருக்கின்றனர். என்னிடமும் அவர்கள் வழங்கியுள்ளனர். அதனை சபையில் சமர்ப்பிக்வும் முடியும். ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் அவை செல்ல வேண்டும். அவற்றை பொதுவுடமையாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.
இந்த நகைகளை கொடுப்பதில் சட்ட வரையறைகள் உள்ளன. கூடுதலாக ஆதரங்களை காட்டும் மக்கள் இருப்பதை போன்று அந்த ஆதாரங்களை காணாமலாக்கியவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவற்றை காணாமலாக்கியவர்கள் தமது நகைகளின் அடையாளங்களை கூறும் போது அதனையும் பரிசீலிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.இதேவேளை கொடுக்கப்படாத மிகுதி நகைகளை எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதாக கூறுகின்றீர்கள். இது நல்ல விடயம் தான் ஆனால் கூடுதலாக அந்த நகைகள் மக்களை சென்றடையும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது என்றார்.