‘அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் மிதக்கும் சவப்பெட்டிகள்..’ : ஏச்சரிக்கை காணொளியை வெளியிட்ட ஹவுத்தி



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளியில், அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் சென்று பல சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் காணொளி அமைந்துள்ளது.

 செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

 சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவிலும் கடந்த சனிக்கிழமை) இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 மேலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.