’இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்த காரணத்தை சொன்ன யுவன்!

தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கதை நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படத்தை விரைவில் இயக்க உள்ளதாக தெரிவித்தார்.தனக்கு இந்தி தெரியாததன் காரணமாகவே ’இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்ததாகவும் கூறினார். மேலும், தனக்கு முக்கிய விருதுகள் கிடைக்கவில்லை என்று வருத்தம் அடைந்ததில்லை என்றும் யுவன் ஷங்கர் ராஜா கூறினார்.இசையமைப்பாளர்கள் வாழ்வின் ஓரிடத்தில் ஆன்மீகத்திற்கு திரும்புவது இயல்புதான் என்ற யுவன் சங்கர் ராஜா, “கடவுள் பற்றிய தேடல் எனக்கு ஏற்பட அம்மாவின் இழப்புதான் காரணம். நா.முத்துக்குமாரின் இடத்தை என்னிடத்தில் யாராலும் நிரப்ப முடியாது. லதா மங்கேஷ்கருடன் பணியாற்ற வேண்டும் என விரும்பினேன், அது முடியாமல் போனது வருத்தமளிக்கும் விஷயம்” என்று தெரிவித்தார்.பயணங்களின்போது இளையராஜா பாடல்களை கேட்பேன் என்று தெரிவித்த அவர், விஜய் மகன் யுவனிசம் என டி-சர்ட் அணிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும், விஜயே எனது மகன் உங்கள் மீது வெறியன் என என்னிடம் நேரில் கூறினார் என்றும் குறிப்பிட்டார்.