சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த 25 பேருடன் ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனுக்கு தொடர்பு - அரசாங்கம் தகவல்

கொழும்பு கட்டடத்தில்  ஸ்டிக்கர் ஒட்டிய   குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட  இளைஞன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன்    தொடர்புடையவர்களுடன் நேரடியாக தொடர்புக்கொள்ளவில்லை. ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புக்கொண்டிருந்த  25 நபர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தவர்களுடன் இவர் தொடர்புக்கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது என பொதுமக்கள்  பாதுகாப்பு  மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்  ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்ற   பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  மீதான  விவாதத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக கட்டடத்தில் வைத்து அண்மையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த இளைஞனின் தொலைப்பேசி மற்றும் சமூக வலைத்தளங்கள்   பரிசீலனை செய்யப்பட்டன.

இந்த இளைஞனின்  தொலைபேசியில் இருந்த   தொலைபேசி இலக்கங்கள் பயங்கரவாதி சஹ்ரானின் உபதேச வகுப்புகளில் பங்குப்பற்றியவர்களுடன் தொடர்புடையது என்று  விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருடன்  இந்த இளைஞன் தொடர்புக் கொண்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் இயக்கிய யூடியுப்  செயலினை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.
இந்த இளைஞன் தவறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவரால் தேசிய பாதுகாப்புக்கும்,  பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்   2025.03.22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு  72  மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த இளைஞன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன்    தொடர்புடையவர்களுடன் நேரடியாக  தொடர்புக் கொள்ளவில்லை.
ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புக் கொண்டிருந்த  25 நபர்களுடன் தொடர்புக்  கொண்டிருந்தவர்களுடன் இவர் தொடர்புக்கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறுகிறது.

இந்த இளைஞன் தனிமையில் வாழ்ந்துள்ளதாக அவரது பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
 
 இவர் முறையாக மத  கல்வியை பெறாமல், இணைய வழிமுறை ஊடாக  மத கல்வியை பெற்றுக்கொண்டுள்ளார்.
தன்னால் தற்கொலைதாரியாக மாற முடியும் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
 இந்த இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடமிருந்து  பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் பல  விடயங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இளைஞன் விடயம் தொடர்பில்  அத்தனகல   நீதிமன்றத்தின் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த இளைஞனின் தந்தை  தலைமறைவாகியுள்ளார். இவரின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவருக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது.