இந்திய : சீன கசப்புணர்வு - ஒரே மேடைக்கு வரவுள்ள மோடி - ஜி ஜின்பிங்..!

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடே உஸ்பெகிஸ்தான் தலைநகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

உக்ரைன் - தாய்வான் விவகாரங்களால் சர்வதேச அளவில் சீனா ஓரங்கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின் சீன அதிபர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என கூறப்படும் நிலையில், உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் இந்தியா - சீனா இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.

அத்தோடு, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பலின் வருகை லடாக் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சீன இராணுவம் அடிக்கடி அத்துமீற முயற்சிப்பது ஆகியவற்றால் இரு நாடுகளிடையேயும் கசப்புணர்வு நீடித்து வருகிறது.

இவ்வாறான கசப்புணர்வுகளால் ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இந்தியாவுக்கு எதிராக சீனா செயற்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினால் திருப்பு முனையாக அமையும் என்று கூறப்படுகிறது.