கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம் - இஸ்ரேலின் முக்கிய தலைகளுக்கு ஈரான் அனுப்பிய தகவல்

ஈரானையும், அதன் மக்களையும் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்கள் என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.



ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல எனவும் அயதுல்லா அலி கொமெய்னி குறிப்பிட்டுள்ளார்.


விசேட தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர் இதனை கூறியிருந்தார்.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய உச்ச தலைவருக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே அவர் பதிலுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதேவேளை, ஈரானின் ஆட்சியை மாற்றுவதே தற்போதைய போர் நடவடிக்கையின் விளைவாக இருக்கலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், ஆனால் அந்நாட்டைத் தாக்குவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தகவல் கசிந்துள்ளது.


ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டால், அமெரிக்க ஜனாதிபதி தாக்குதல்களைத் தொடங்குவதை நிறுத்தி வைப்பார் என்று மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஈரானில் உள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


முன்னதாக நிபந்தனையற்ற சரணடைதலுக்கான ட்ரம்பின் கோரிக்கையை ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி நிராகரித்ததை அடுத்து தமது பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், வழக்கம் போல தாக்குதல் நடத்தலாம் அல்லது நடத்தாமல் இருக்கலாம் என குழப்பியுள்ளார்.


இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்க இராணுவத்தின் எந்த வகையான தலையீடும் மிகப்பெரிய விலையை அளிக்க வேண்டியிருக்கும் என காமெனி எச்சரித்துள்ளார். மேலும் ஈரான் தேசம் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


இதனிடையே இஸ்ரேல்  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஈரானியர்களிடமிருந்து மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக இஸ்ரேல் தகவல்களை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த மிரட்டல் அழைப்புக்கள் நேற்றைய தினம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மிரட்டல் அழைப்புக்கள் மாத்திரமின்றி குறுந்தகவல்களும் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


அதில் நீங்களே உங்கள் கல்லறையைத் தோண்ட தொடங்கிவிட்டீர்கள்.. தயாராக இருங்கள் என்று கூறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மிரட்டல் அழைப்பு சம்பவம் இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.


ஈரான் இஸ்ரேல் போரில் தொடர்ந்து ஈரான் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 

இஸ்ரேலை விட ஈரான் கையே இதில் ஓங்கி உள்ளது. இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடையக்கூடும் என்ற நிலையில், அமெரிக்க இராணுவம் சுமார் மூன்று டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி உள்ளது.
 

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால் அமெரிக்க தளவாடங்களை ஈரான் தாக்கும் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.