அரச ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கணினி தரவுகளை மாற்றியமைத்து நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரச ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை மாற்றியமைத்து காசோலைகள் மூலம் 2 கோடியே 70 இலடத்துச 31ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக மஹரகமையில் அமைந்துள்ள அரச ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் பொது மேளாலரினினால் கடந்த மார்ச் 20 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் மோசடிக்கு உதவி ஒத்தாசை புரிந்த இரு பெண்களையும் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 25, 32 மற்றும் 35 வயதுடைய கம்பஹா, களணி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் நேற்று புதன்கிழமை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.