8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்திய சூரரைப் போற்று!

சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கியவர். இவரது திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘சூரரைப் போற்று’. 2022 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியது.

கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும், முக்கிய கதாப்பாத்திரங்களில் ஊர்வசி, கருணாஸ், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

2021ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை ’சூரரைப் போற்று’ வென்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான தேசிய விருதையும் வென்று அசத்தியது.இந்நிலையில், 67வது தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 8 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த இயக்குநராக சுதா கொங்கரா, சிறந்த இசை ஆல்பத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த துணை நடிகையாக ஊர்வசி, சிறந்த பின்னணி பாடகராக கோவிந்த் வசந்தா மற்றும் கிறிஸ்டின் ஜோஸ், சிறந்த பின்னணி பாடகியாக தீ, சிறந்த ஒளிப்பதிவிற்காக நிகோத் பொம்மி, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம், மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.