வேலணை பாலம் புனரமைக்கப்படுமா? சிறீதரன் கேள்வி- இப்போதைக்கு முடியாது...! அமைச்சர் பந்துல பதில்...!

யாழ் வேலணைத்துறையில் இருந்து புங்குடுதீவு மடத்துவெளி வரையான 4 கிலோமீற்றர்கள் பாலம், 60 வருடங்களாக புனரமைப்பு இன்றி ஆபத்தான நிலையில் காணப்படுவதால், அவசரமாக பாலத்தைப் புனரமைக்க யாரிடமாவது நிதி உதவியைக் கோர முடியாதா? என்று அமைச்சர் பந்துலவிடம் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறீதரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேலணைப் பாலம் என்பது, புங்குடுதீவில் 8 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட ஒரு பெரிய தீவையும், நெடுந்தீவு எனும் தனியான பிரதேச செயலாளர் பிரிவை உடைய தனித்தீவையும், நயினாதீவு எனும் தனித்தீவையும் உள்ளடக்கிய பிரதான பாதையில் இருக்கிற பாலம் ஆகும். 

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்ட இந்த பாலம் யுத்த காலத்தில் எவ்வித புனரமைப்பு பணிகளும் செய்யப்படவில்லை. புங்குடுதீவு, நைனாதீவு, நெடுந்தீவு இந்த தீவுப்பகுதிகளின் மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று வரவும், சொந்த ஊர்களில் குடியேறவும் வேண்டும் என்றால் பிரதான போக்குவரத்துப் பாதையில் உள்ள இந்தப் பாலத்தை புனரமைத்து தர வேண்டும் என்று கேட்கின்றனர். 

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பாலமும், வழுக்கையாறு தொடக்கம் அராலி வேலணை புங்குடுதீவு வரையான  பாதையும் 60 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படவில்லை. 

ஆங்காங்கே வீதிகள் மட்டும் காப்பெட் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி இப்படி யாரிடமாவது அவசர உதவியைப் பெற்று துரித கதியில் இலங்கையின் மிக நீளமான 4 கிலோமீற்றர் உடைய பாலத்தையாவது புனரமைக்க ஏதாவது வழி இருக்கிறதா? என்று ஆராயவும் என்று சிறீதரன் எம்.பி கோரிக்கை வைத்ததோடு, சரியான திட்டங்களை வகுத்தால் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமது பங்களிப்புகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,

தற்போதைய நிலையில் வரி செலுத்துகின்ற மக்களின் நிதியிலிருந்து குறித்த பாலத்தை புனரமைக்க முடியாது.

கடந்த அரசாங்கம் வடக்கின் வசந்தம் - கிழக்கின் உதயம் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் வீதிகள் பாலங்களை புனரமைத்தது உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மற்றைய நாடுகளின் நிதி உதவியில் தான். 

ஆகவே, இப்போது செய்ய முடியாத காரணம். எடுத்த கடனை நாங்கள் செலுத்தவில்லை. கடன் மறுசீரமைப்பு செய்யும் வரை 5 சதம் கூட யாரும் தரமாட்டார்கள்.

பல நாடுகளுடன் கதைத்துக் கொண்டிருக்கிறோம். கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகள் உடன்பட்டுள்ளன.

இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்போம் என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.