கனடாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு நான்கு ஆண்டுகளின் பின் கிடைத்த தண்டனை!

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த கனேடிய பிரஜையான சசிகரன் தனபாலசிங்கத்திற்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் சசிகரன் தனபாலசிங்கத்திற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரொறண்ரோவின் ஸ்காபரோவில் பேரூந்தில் இருந்து இறக்கி, வீட்டிற்கு நடந்துசென்றுகொண்டிருந்த 27 வயதான மனைவியான தர்ஷிகா ஜெகநாதன் என்பவரை அவரது கணவரான சசிகரன் தனபாலசிங்கம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைகளை ஜெகநாதனின் குடும்பத்தினர் இலங்கையில் இருந்து காணொளி வாயிலாக நேரடியாக பார்வையிட்டிருந்தனர்.

கனடாவில் குடியுரிமை பெறுவதற்காகவே

இந்த வழக்கில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கணவரான சசிகரன் தனபாலசிங்கம், குற்றவாளி என கடந்த மே மாதம் தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

கைது செய்யப்பட்டதில் இருந்து காவலில் இருக்கும் சசிகரன் தனபாலசிங்கம் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பாளர் மூலம் இறுதியாக வழக்கில் கருத்து வெளியிட நீதிபதி வாய்ப்பை வழங்கியிருந்தார்.

கனடாவில் குடியுரிமை பெறுவதை இலக்காக கொண்டு தர்ஷிகா ஜெகநாதன், தம்மை திருணம் செய்துகொண்டதாகவும் கிராமத்தை சேர்ந்த மனைவிக்கு நகரத்தில் பிறந்த தம்மை பிடிக்கவில்லை எனவும் சசிகரன் தனபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கு வருவதற்கு வசதியாக தர்ஷிகா ஜெகநாதன் திருமணத்தை பயன்படுத்திக் கொண்டதாகவும் தம்மை மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார் எனவும் குற்றவாளியான சசிகரன் தனபாலசிங்கம் கூறியுள்ளார்.

இதன்காரணமாகவே தாம் மது அருந்துவதற்கு ஆரம்பித்ததாகவும் குற்றாவளியான சசிகரன் தனபாலசிங்கம் கூறிய போது, அவரை நோக்கி நீதிபதி ஆன் மொல்லோய் கடும் தொனியில் விமர்சித்துள்ளார்.

ஏழைப் பெண்ணை வெட்டி கொலை செய்ததை காணொளியில் தாம் பார்த்ததாகவும் இது காட்டுமிராண்டித்தனமான செயல் எனவும் கூறியுள்ள நீதிபதி இதுபோன்ற விடயத்தை தாம் நேரில் பார்தத்தில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து குற்றவாளியான சசிகரன் தனபாலசிங்கத்திற்கு 25 ஆண்டுகள் சிறைவிடுப்பில் வெளிவர முடியாதவாறு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கனடாவின் சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிக்கு இந்த தண்டனை தகுதியானது என கூறியுள்ள நீதிபதி ஆன் மொல்லோய், குற்றவாளியின் பரம்பரை அலகு தரவுகளை தேசிய மரபணு தரவு வங்கிக்கு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.