இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே? : அக்னெஸ் கலமார்ட் கேள்வி


இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே? அவர்களிற்கு என்ன நடந்தது? என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.  

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டேன்.


நான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டேன்.
 
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன். அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் மீள்எழுச்சி தன்மையும் நீதியை காண்பதற்கான அவர்களது உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களிற்கு என்ன நடந்தது. காணாமல்போதல் என்பது மிகமோசமான வன்முறை. அது முடிவிற்கு வராது. பாதிக்கப்பட்டவர்களிற்கு பலபல வருடங்களிற்கு இந்த வலி தொடரும்.

மரணத்தை விட இது வலிமிகுந்தது. இது உளவியல் சித்திரவதை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும்.

இது இலங்கையின் மீது விழுந்த கறை. இந்த கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும்.

அந்த குழந்தைகள் எங்கே? நான்கைந்து மாத குழந்தைகள். மூன்று நான்கு வயதானவர்கள். நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன்.

இது மன்னிக்க முடியாத குற்றம்- இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.