சாதனையின் விளிம்பில் நாம்.. பணயக்கைதிகளை ஹமாஸ் இவ்வாறே விடுவிப்பர்.." - பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட தகவல்


வார இறுதிக்குள் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,


பணயக்கைதிகளில் உயிருடன் இருக்கும் 20 பேர்களும், மரணமடைந்துள்ள 28 பேர்களின் சடலங்களும் எதிர்வரும் நாட்களில் ஹமாஸ் படைகளால் ஒப்படைக்கப்படும்  
இஸ்ரேல் ஒரு பெரிய சாதனையின் விளிம்பில் இருக்கின்றது. இதற்கு காரணம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆவார்.

காஸாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் கட்டம் கட்டமாக வெளியேறும்.

யூத மக்கள் கொண்டாடும் Sukkot  என்ற விடுமுறை நாட்களில் பணயக்கைதிகள் விடுவிப்பு குறித்த தகவல் வெளியாகும் என தான் நம்புவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆனால், பணயக்கைதிகள் விடுதலை என்பது காலதாமதமாகலாம் என்றே மத்தியஸ்தர்கள் எச்சரித்துள்ளனர். மரணமடைந்த பணயக்கைதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஹமாஸ் நிர்வாகத்திற்கு தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், ட்ரம்பின் இந்த ஒப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் கைவிடப்படலாம் என்றும், கட்டாரில் வசிக்கும் ஹமாஸ் நிர்வாகம் இந்த ஒப்பந்தங்களை ஏற்றுகொண்டுள்ள நிலையில், ஹமாஸ் படைகள் இதுவரை ஏற்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..


மேலும், இந்த விவகாரத்தில் ஹமாஸ் நிர்வாகம் தாமதப்படுத்துவதை பொறுத்துக்கொள்வதாக இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
 
விரைவாக முடிவெடுக்கத் தவறினால், வாய்ப்புகள் கைவிட்டுப் போகலாம் என்றும் ட்ரம்ப் ஹமாஸ் படைகளிடம் கூறியுள்ளார்.