மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம்

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்களின் இருநூறு வருடத்தை கடைப்பிடிக்கும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேர்களே மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையகம் எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனிக்கு வலுச் சேர்க்கும் முகமாக இன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மிக எழுச்சியுடன் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட குடிசார் சமூக அமைப்புகளினால் குறித்த நடைபவனி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது 

குறித்த பேரணி 3 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவடைந்துள்ளது.

200 வருடங்களாக ஒரு ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் மலையக மக்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடை பயணம் முன்னெடுக்கப்பட்டது.