15 நாட்கள் விசா இல்லாத நுழைவு..! இரு ஆசிய நாடுகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

சிங்கப்பூர் மற்றும் புருனே பொதுமக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்க சீனா மீண்டும் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை (26) முதல் 15 நாள் விசா இல்லாத நுழைவை சீனா மீண்டும் ஆரம்பிக்கும் என்று இரு நாடுகளிலும் உள்ள அதன் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் மற்றும் புருனேயின் பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்முறை பயணம் மேற்கொள்ளலாம் எனவும், சுற்றுலா, உறவினர்கள் நண்பர்களை சந்திக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, அந்நாட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண கடவுச்சீட்டுகளுக்கும் சீனாவிற்கு விசா இல்லாத நுழைவு கிடைக்கும் என்று தூதரகங்கள் தங்கள் வலைத்தளங்களில் அறிவித்துள்ளன.

இந்தநிலையில் கோவிட் பெருந்தொற்று பரவுவதை தடுக்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு நாடுகளுக்குமான விசாக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.