விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்: முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு


தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கரூரில் கடந்த 27ஆம் திகதி தமிழக வெற்றி கழகத்தின்  தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் சனநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக கரூர் நகர பொலிஸ் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
அவர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில்
விஜய் நண்பகல் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாக தகவல் பரவியதால், காலை 10 மணியில் இருந்தே வேலுசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என கரூர்மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் விண்ணப்பத்தில் தெரிவித்த நிலையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர்.

அதிக கூட்டத்தை கூட்டி, அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய், கரூருக்கு வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதனால், அங்கு பல மணி நேரம் காத்திருந்த மக்கள் வெயிலிலும், தாகத்திலும் சோர்வடைந்தனர்.

வீதியோரங்களில் தகரக் கொட்டகைகள், மரங்களில் தொண்டர்கள் ஏறி உட்கார்ந்ததால், சில இடங்களில் தகரக் கொட்டகை உடைந்தும், மரக்கிளைகள் முறிந்தும் விழுந்தன. இதனால், அதில் உட்கார்ந்திருந்தவர்கள், கீழே நின்றிருந்த மக்கள் மீது விழுந்தனர். இதனால், பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையே தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.