பௌத்த தேரர் விவகாரம்! சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்"தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான காணொளி நபரொருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பிட்ட நபர்கள் தண்டிக்கக்கூடிய குற்றத்தை செய்து வருகின்றார்கள். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 365 டி 1 இன் அடிப்படையில் இது தண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஒருவர் இதுபோன்ற பிரச்சாரத்தை செய்தால், கடின உழைப்புடன் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அது விசாரணையில் நிரூபிக்கப்பட வேண்டும்.

ஒரு நபர் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலம் இவற்றை சமூகமயமாக்கும் போது, அது தண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.'' என தெரிவித்துள்ளார்.