வெடுக்குநாறிமலை பூஜை வழிபாடுகள்! பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு


வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளிய முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் சிலைகள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு இன்று (17.05.2023) வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் முறைபாட்டாளார்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த வழக்கில் தொல்பொருட் திணைக்களத்தினர் முதன்முறையாக நீதிமன்றில் முன்னிலையாகி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி முறைப்பாட்டாளர்கள் செயற்பட்டதாக தகவல் தெரிவித்தனர். இன்றும் அந்த விடயத்தை நீதிமன்றில் கூறினார்கள்.

இருப்பினும், தொல்பொருள் தொடர்பான இந்த பிரதேசத்திலே மார்ச் மாதம் இடம்பெற்ற  விக்கிரகங்கள் உடைத்த சம்பவத்தில் தொல்பொருட் திணைக்களம் ஒரு விரலைகூட அசைக்கவில்லை. அந்த விடயத்தை கரிசனையில் கூட எடுக்கவில்லை.

அதனை மீள நிறுவும்படி நீதிமன்றம் உத்தரவை வழங்கிய பின்னரே மீள நிறுவியதால் தொல்பொருள் சேதமேற்ப்பட்டதாக பொய்யான புகாரை தெரிவிப்பதாக நாம் மன்றுக்கு எடுத்துரைத்தோம். இந்த விடயம் தொடர்பில் சந்தேகநபராக எவரையும் குறிப்பிடவில்லை.

தொல்பொருட் திணைக்களம், வனவளத்திணைக்களம் போன்றவற்றால் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படுகின்ற ஒரு இடத்தில் இப்படியான விக்கிரகங்களை உடைத்தமை ஒரு விசித்திரமான விடயம் என்பதையும் கூறினோம்.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தார்.

அத்துடன் தொல்பொருள் அடையாளங்கள் சேதமாகின்ற வகையில் செயற்படா வண்ணம், சமய சடங்குகளை எளிய முறையிலே செய்வதற்குமான எச்சரிக்கையும், முறைப்பாட்டாளர்களான எமக்கும் மன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என கூறியுள்ளார்.

இன்றைய வழக்கில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களுடன் ஆலயத்தின் பூசகர் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.