வெடுக்குநாறியில் காவல்துறையினரின் அட்டகாசம்: ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்களில் 8 பேரை நெடுங்கேணி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுப்பதுடன், அவர்களை விடுதலை செய்யுமாறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இது குறித்து இன்றையதினம்(16) கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஷ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த கலந்துரையாடல் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை அன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி, கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஷ்வரன், புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.