கொழும்பு, பொரளை, சஹஸ்புர சிறிசர வீட்டுத் தொகுதிக்கு அருகில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் குடு துமிந்த தலைமையிலான பாதாள குழு தொடர்பு பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன வீட்டுத் தொகுதி மைதானத்தில் வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில்நடந்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஒருவரும் பிற்பகல் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த, இரண்டு அடையாளம் தெரியாதவர்கள், ரி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்களை குறிவைத்து பல தடவைகள் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டதாகவும், சம்பவ இடத்தில் 25 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், உயிரிழந்தவர்களில் ஒருவர் “குடு சத்து‘ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலிலுள்ள களனியைச் சேர்ந்த “பகடயா‘ என்று அழைக்கப்படும் 23 வயதுடைய சுரேஷ் மதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மற்றய இளைஞர்கள் சஹஸ்புர பகுதியைச் சேர்ந்த 21 முதல் 23 வயதுக்குட்பட்டவர்களாவர்.
இந்த தாக்குதல் “குடு துமிந்த‘ கும்பலால் நடத்தப்பட்டதாகவும், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள “குடு சத்து'வின் சகோதரர் ஒருவர், சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த துப்பாக்கிச் சூடு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் எனவும், இதற்கு பின்னணியில ;உள்ள காரணங்களை கண்டறிய தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.